தேவதை இதழில் எனது பயணக் கட்டுரை ...

வியாழன், ஏப்ரல் 21, 2011


                         கடந்த ஏப்ரல் 1 - 15   "தேவதை"  இதழில்,
சுற்றுலா தொடர்பானக் கட்டுரையில், நாகர்கோவிலைப்
பற்றிய எனது பயணக்கட்டுரையும் வெளிவந்துள்ளது.
அதை தொகுத்து அனுப்பிய திருமதி.விக்னேஷ்வரிக்கும்,
வெளியிட்ட தேவதை இதழுக்கும் என் மனமார்ந்த நன்றி.

காந்தளூர் வசந்தகுமாரன் கதை - புத்தகத்தைப் பற்றி...

திங்கள், ஏப்ரல் 18, 2011

காந்தளூர்  வசந்தகுமாரன் கதை - சுஜாதா
உயிர்மை பதிப்பகம் வெளியீடு : 173 
விலை - ரூ.130 /-
சரித்திர நாவல்.
முதல் பதிப்பு : டிசம்பர் 1995
இரண்டாம் பதிப்பு : செப்டம்பர் 2008 

  
                 இந்தக் கதையை பெரும்பாலும் எல்லாரும் 
படித்திருப்பார்கள். எனக்கு இப்பொழுதுதான் படிக்க 
சந்தர்ப்பம் கிடைத்தது. சரித்திர நாவல்கள் எனில் எனக்குத்
தனி விருப்பம்தான். கதைகளில் வரும் சரித்திரக் காட்சிகளை 
கற்பனை செய்துகொண்டே படிப்பது மிகவும் பிடிக்கும் . அந்த 
வகையில் இந்தக் கதையும் கற்பனை செய்து படிப்பதற்கு
அருமையான தீனிதான்.

              ராஜராஜ  சோழன் வாழ்ந்த காலத்தில்  நடக்கும் கதை 
இது. சோழ நாட்டு வளங்களை,  நேரில் பார்ப்பது போல,
வர்ணனை செய்திருக்கிறார் திரு.சுஜாதா அவர்கள். இந்த 
நாவல் திரு. சுஜாதா அவர்களின் இரண்டாவது சரித்திர 
நாவலாகும். இந்த நாவலை பெரும்பாலும் இலக்கணத்
தமிழில்  எழுதியுள்ளார். இதைக் கதையின் கதாநாயகனான 
வசந்தகுமாரன், யாப்பிலக்கணத்தில் பேசுவதிலிருந்து 
அறியலாம். வசந்தகுமாரனின் துடுக்குத்தனமும்,
வீரமும் நாம் நேரில் காண்பது போலவே உள்ளது. 
சரித்திர  நாவல்களைப் படிக்கும் ஆர்வம் உடையவர்களுக்கு 
கண்டிப்பாக இந்த நாவலும் பிடித்தமான ஒன்றாக இருக்கும்.


 

 
 

'சுருச்சி' (SURUCHI)

வியாழன், ஏப்ரல் 14, 2011


அனைவருக்கும் இனிய சித்திரைத்திருநாள் வாழ்த்துக்கள் !!!

                என் கணவரது நண்பர், நீண்ட நாட்களாக ஒரு
ரெஸ்ட்டாரன்ட் பற்றி சொல்லிக்கொண்டிருந்தார். அது
குஜராத்தி மற்றும் ராஜஸ்தான் உணவுகளுக்கான புகழ்பெற்ற
ரெஸ்ட்டாரன்ட் என்றும் சாப்பாடு அவ்வளவு அருமையாக
இருக்கும் என்றும் கூறியிருந்தார்.

              போன வாரம்தான் அந்த ரெஸ்ட்டாரண்டிற்கு
போவதற்கு சந்தர்ப்பம் கிடைத்தது. டெல்லி-கரோல்பாக்
ஏரியாவில் இருக்கும் அந்த ரெஸ்ட்டாரன்ட்டின் பெயர்  'சுருச்சி'
(SURUCHI). போர்டிலேயே 'Rajasthani and Gujarathi Restaurant' 
 எனப் போட்டிருந்தது.  இது ஒரு வெஜிடேரியன்
ரெஸ்ட்டாரன்ட். மெனு கார்டிலேயே பஞ்சாபி தாலி
(இங்கு சாப்பாட்டிற்கு  தாலி என்று சொல்கிறார்கள்), குஜராத்தி
தாலி , ராஜஸ்தானி  தாலி , சவுத் இந்தியன்  தாலி என நான்கு
வகைதான் இருக்கிறது. ஆனால் எல்லாமே அன்லிமிடெட். இந்த ரெஸ்ட்டாரன்ட்டுடைய லோகோ ( EAT LIKE A KING )விற்கு 
ஏற்ப சாப்பிட்டு முடிக்க, முடிக்க வைத்துக்கொண்டே
இருக்கிறார்கள்.

                   குஜராத்தி  தாலி                         பஞ்சாபி  தாலி
                        

                  ராஜஸ்தானி  தாலி                  சவுத் இந்தியன்  தாலி

              நாம் எந்த சாப்பாட்டைத் தேர்ந்தெடுத்திருக்கிறோம் 
எனக் கேட்டுக் கொண்டு, அந்த ஊர் சாப்பாடு ஐட்டங்களை
பெயர் சொல்லி வைக்கிறார்கள். அதுபோல, ஒரு சின்ன மண்
டம்ளரில், மோரும் குடிக்க, குடிக்க ஊற்றிக் கொண்டே 
இருக்கிறார்கள். கம்பு ரொட்டி, தவா ரொட்டி, கிச்சடி சாவல் 
(அரிசி), சாதம், சுட்ட அப்பளம், ஆறு வகைப் பொரியல் என  
அனைத்தும் அன்லிமிடட் தான். கடைசியாக குலாப் ஜாமூன்
அல்லது கஸ்டர்ட் ( நமது விருப்பத்திற்கு ஏற்ப ஏதாவது 
ஒன்று) என ஒரு இனிப்புடன் சாப்பாடு முடிவடைகிறது.
           நான் குஜராத்தி  தாலி ஆர்டர் செய்திருந்ததால், முதலில் 
அந்த ஊர் ஸ்பெஷலான ' டோக்ளா ' வைக்கப்பட்டது. 
பெரும்பாலான குஜராத்தி டிஷ்கள் இனிப்பாகவே இருந்தன. 
வெரைட்டியாக சாப்பிட விரும்புபவர்களுக்கு ஏற்ற இடம்
இது. ஆனால், என்ன விலை தான் கொஞ்சம் அதிகம். ஒரு 
முழுச் சாப்பாட்டின் விலை ரூ.250 /-

ராஜபாளையம்...

வெள்ளி, ஏப்ரல் 01, 2011

              எனது சொந்த ஊரான ஸ்ரீவில்லிபுத்தூருக்கு பக்கத்தில் 
இருக்கும் ஊர் இந்த ராஜபாளையம். இது மதுரையிலிருந்து 
85 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்த ஊருக்குள் நுழையும் 
பொழுதே "நாய்களின் நகரம்" உங்களை வரவேற்கிறது 
என்றுதான் போர்டு வைத்திருப்பார்கள். அந்த அளவிற்கு 
ராஜபாளையத்து நாய்கள் மிகவும் புகழ் பெற்றவை. 
 

 
              பல வருடங்களுக்கு முன்பு, ஆந்திராவிலிருந்து 
'ராஜூக்கள்' என்னும் சமூகத்தினர் இங்கு புலம்பெயர்ந்து 
ஆட்சிபுரிந்ததால் ராஜாக்களின் கோட்டை அதாவது 
"ராஜபாளையம்" என்று அழைக்கப்படுவதாக 
படித்திருக்கிறேன். மேலும் இங்கு சஞ்சீவி மலை என்ற ஒரு
மலை உள்ளது. இது லக்ஷ்மனனுக்காக, அனுமன் எடுத்து 
வந்த சஞ்சீவி மலையின் ஒரு பகுதி என்கிறார்கள். 


            ராஜபாளையத்திற்கு அருகில் அய்யனார்கோவில் என்ற 
ஒரு இடம் உள்ளது. இது மேற்குத்தொடர்ச்சி மலையின் 
அடிவாரத்தில் உள்ள ஒரு காட்டுப்பகுதி. இங்கு அருவியும், பல 
அரிய வகை மூலிகைகளும், உயிரினங்களும் உள்ளன. இது 
பிக்னிக் செல்வதற்கு ஏற்ற இடம். ராஜபாளையத்தைச் சுற்றி 
பல காட்டன் மில்கள் உள்ளன. இங்குள்ள பெரும்பாலோர்  
வேலை பார்ப்பது இந்த ஆலைகளில்தான்.



இந்த ராஜபாளையத்தைப் பற்றி சமீபத்தில் படித்த கட்டுரை :
சரித்திரங்களின் சங்கமம் ராஜபாளையம் :- 

             ' தனி ஒருவனுக்கு உணவில்லையேல் ஜகத்தினை
அழித்திடுவோம்...' என்ற இந்த வரிகளுக்கு சொந்தக்காரரான
முண்டாசுக் கவிஞர் பாரதியார், ஒருமுறை பாழடைந்த தனது
வீட்டை சீரமைக்க எண்ணி, மனைவி செல்லம்மாள் 
வற்புறுத்தலால், ராஜபாளையம் ஜமீன்தாரை பார்க்க வந்தார்.
அவர் ஊரில் இல்லாததால், பசியும், களைப்புமாய்
ராஜபாளையத்தில் எழுதிய அனல் வரிகள்தான் இவை. கி.பி.15 
ஆம் நூற்றாண்டில் விஜயநகர மன்னரின் தலைமுறையைச் 
சேர்ந்த சின்னராஜா இங்கு கோட்டை கட்டி ராஜ்ஜியம் 
செய்ததால், இந்த ஊரின் பெயர் ராஜபாளையமாயிற்று. 
பாளையம் என்றால் கோட்டை என்று பொருள். 
ஆரம்பத்தில் கீழராஜகுலராமன் என்ற பகுதியில் தங்கி நகரை
விரிவுபடுத்தினர். பின், கி.பி. 1483 ல் ராஜபாளையத்தில் உள்ள
சஞ்சீவி மலையில் இருப்பிடத்தை மாற்றினர்.
               விஜயநகரத்தில் நடந்த கள்ளிக்கோட்டை போரால் 
மக்களின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்தது. இதனால் 
அங்கிருந்து ராஜூக்கள் சமூகத்தினர் ராஜபாளையத்தில் 
குடியேறினர். இதன் அடையாளமாக தற்போதும் 
சமுதாயசாவடி இருக்கிறது. இங்கு கி.பி.12 ம் 
நூற்றாண்டின் இறுதியில் பாண்டிய மன்னர்களால்
விரிவு படுத்தப்பட்ட வெங்கடேசப் பெருமாள் கோவில் 
உள்ளது. மதுரையை ஆண்ட முதலாம் ஜடாவர்ம
குலசேகரபாண்டியன் இக்கோயிலின் பராமரிப்பு 
செலவுகளுக்கு நிலங்களைத் தானமாக வழங்கினார்.
இவ்விபரங்கள் கோயில் கர்ப்பகிரகத்தில் கல்வெட்டுகளாக
பொறிக்கப்பட்டுள்ளன. மேலும் தாமரைக்கண்ணன் என்பவர்,
தினமும் எண்ணெய் விளக்கேற்றும்  செலவுக்காக, தனது
ஆஸ்தியை வழங்கிய விவரமும் கல்வெட்டில் உள்ளது.
 முகமண்டபத்தின் தூண்கள் கிருஷ்ணமாராஜா மற்றும்
சோழராஜா என்பவர்களால் உருவாக்கப்பட்டன.

                மதுரை ரோட்டில் வடுக ஊரணி என்னும் ஊரணி
உள்ளது. பாண்டிய மன்னர்களால் உருவாக்கப்பட்டதாக
கருதப்படும் இந்த ஊரணி சமீபத்தில் தூர்
வாரப்பட்டிருக்கிறது. அப்போது சிவலிங்கம், நந்திகள்
உட்பட பல சிலைகள் கிடைத்துள்ளன.





              மேலும் 600 ஆண்டுகள் பழமையான மரம் ஒன்று
இன்றும் ராஜபாளையத்தில் இருக்கிறது. இதன் பெயர்
"ஆப்பிரிக்கன் போபாப்". ஆப்பிரிக்கக் காடுகளில் மட்டுமே
காணப்படும் இந்த மரம், அதிக வயதுடைய மரங்களில்
ஒன்று. பிற்கால பாண்டிய மன்னர்கள் தங்களது  கடல்
பயணத்தின் மூலம் இதைக் கொண்டு வந்திருக்கலாம்
எனக் கூறப்படுகிறது.


 
                சுதந்திரப் போராட்டக் காலத்தில், வீரர்கள் நமது
தேசியக் கொடியை சஞ்சீவி மலையின் உச்சியில் பறக்க
விட்டு புரட்சி செய்தனர். இவ்வாறு திரும்பும் இடமெல்லாம்
வரலாற்று சுவடுகளை தாங்கி நிற்கும் ராஜபாளையம்,
சரித்திரங்களின் சங்கமமாக உள்ளது.

 




   
Related Posts with Thumbnails